Jun 22, 2007

மனுஷ்ய புத்திரன் : நேர்காணல்-III

T.D. ராமகிருஷ்ணன் அவர்கள் மலையாள சஞ்சிகை ஒன்றிற்காக எடுத்த நேர்காணலின் இரண்டாம் பாகம் இது.

11. ஏன் தமிழ் எழுத்தாளர்களிடையே இந்த அளவுக்கு தனிப்பட்ட விரோதங்களும் குழுமனப்பான்மைகளும் நிலவுகின்றன?

தமிழ் இலக்கியத்தில் எட்டப்பட்டிருக்கும் பெரும் சாதனைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாதவர்களே திரும்பத் திரும்ப குழுச்சண்டைகளைப் பற்றியும் சச்சரவுகளைப் பற்றியும் பேசுகிறார்கள். உண்மையில் இந்தச் சச்சரவுகள் அனைத்தும் ஒரு தற்காலிகமான பொழுதுபோக்கு என்பதற்குமேல் அதில் இலக்கியச் சாரம் ஏதுமில்லை. இத்தகைய புகைச்சல்களும் வெறுப்புகளும் உலகெங்கிலும் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன.
அதன் வழியே அந்த மொழியின் இலக்கியப் போக்குகள் மதிப்பிடப்படுவதில்லை. மேலும் தமிழில் இந்த இலக்கியச் சச்சரவுகள் அதன் வளர்ச்சியை எந்த விதத்திலும் பாதித்ததுமில்லை. தனிமனித பிறழ்வுகள், தனிமனிதப் பிரச்சினைகளே தவிர இலக்கியப் பிரச்சினைகளே அல்ல. தற்செயலாக அவர்கள் எழுத்தாளர்களாக இருந்துவிட்டால்
அவை மொழியில் பதிவு செளிணியப்படுகின்றன. பலவீனமான எழுத்தாளர்களே சச்சரவுகளின் வெப்பத்தில் குளிர் காய்கிறார்கள். அவர்களின் நிலை மிகவும் பரிதாப மானது. அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஒரு கலவரம் நடக்கும்போது கடையில் இருக்கும் பொருள்களை திருடிக்கொண்டு ஓடுபவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்திற்கு சமமானது. எனவே நீங்கள் தமிழ் இலக்கியத்தை சச்சரவுகளின் பரப்பாகப் பார்ப்பதை நான் கடுமையாக மறுக்கிறேன்.

12. தமிழ் இலக்கியத்தில் பெண்ணியத்தின் பாத்திரத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அது ஒரு தரப்பு. வளர்ந்து வரும் வலுவான தரப்பு. அவர்கள் இருப்பும் மொழியும் திடமானது. கடந்த பத்தாண்டுகளில் எழுத வந்திருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தீவிரமான வெளிப்பாடுகளும் பெண்ணிய எழுத்தின் மேல் பெரும் கவனத்தை உருவாக்கி இருக்கின்றன. அதில் பெரும்பாலானோர் தொடக்க கால கவிஞர்கள், எழுத்தாளர்கள். அவர்கள் ஆழமான, தனித்துவம் வாய்ந்த இலக்கியப் பிரதிகளை இனிமேல்தான் உருவாக்க வேண்டும். இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு எதிர்கொள்ளல். ஒரு துவக்கப் புள்ளியின் பதட்டங்கள். ஆனால் இந்தப் புள்ளியிலிருந்து
ஒரு சிறப்பான இலக்கியப் போக்கு தமிழில் வளரும் என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். இதில் மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் பல பெண் படைப்பாளிகள் இலக்கியம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்குப் பதில் பெண்ணிய அரசியலின் சாய்மானங்களைப் பற்றிக்கொண்டு நிற்க விரும்புகிறார்கள். அரசியல் கருத்தாக்கங்களின் புரவலர்கள் ஒரு படைப்பை ஒரு நாளும் பாதுகாக்க முடியாது என்பதை பல பெண் படைப்பாளிகள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்கள் படைப்பின் சவால்களை மொழிக்குள்ளும் வாழ்வினுள்ளும் தேடிச் சொல்லும்போதே இந்த யுகத்திற்கான பிரதிகளை உருவாக்க முடியும்.

13. தமிழில் ஆண் எழுத்தாளர்கள் பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகிறதே.

இந்தக் கேள்வியை ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதிர்கொள்வதற்காக நான் மிகவும் கூச்சமடைகிறேன். இதுபோன்ற கேள்விகளை ஒரு எழுத்தாளனை நோக்கி எழுப்புவதற்கு நீங்களும் கூச்சமடைய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
என் நண்பரும் சிறுகதை எழுத்தாளருமான ஜீ. முருகன் ஒருமுறை எழுதினார், ‘பையன்களால் கேலி செய்யப்படும் பள்ளி மாணவிகள் தங்கள் அப்பாக்களிடம் அவர்களைப் பற்றி முறையிடுவதைப் போல சில பெண் எழுத்தாளர்கள் தங்கள் சக ஆண் எழுத்தாளர்களைப் பற்றி ஊடகங்களிடம் முறையிடுகிறார்கள் என்று.’

இதுபோன்ற பாலியல் துன்புறுத்தலுக்கு ஆண் எழுத்தாளர்களால் துன்புறுத்தப்படுவதாகச் சொல்லும் ஒரு பெண் எழுத்தாளர்கூட இதுவரை ஒரு ஆண் எழுத்தாளர் பெயரையும் எங்கும் சொல்லியதில்லை. அவர்களின் பெயர்கூட தெரியாத நிலையில் அவர்கள் எழுத்தாளர்கள் என்று எப்படி அறிந்துகொண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

நம்முடைய சமூகத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவது பரவலான
ஒன்று. அதிலும் அவர்கள் பொது வாழ்க்கையில் இருந்துவிட்டால் இந்தத்
துன்புறுத்தல்கள் இன்னும் அதிகமாகிவிடுகின்றன. இது ஒரு சமூகப் பிரச்சினை. துன்புறுத்தப்படும் பிற பெண்களோடு இணைந்து இப் பெண் எழுத்தாளர்கள் போராட வேண்டுமே அல்லாது தாங்கள் எழுத்தாளர்கள் என்பதற்காக தங்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு விசேஷ அந்தஸ்தையும் அடையாளத்தையும் கோரக் கூடாது. பொதுவாக தமிழில் பெண் எழுத்தாளர்கள் தொடர்பாக போலி சர்ச்சைகளை உருவாக்கும் பத்திரிகைகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை உற்சாகத்துடன் பிரசுரிக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளின் மூலமாக தங்களுடைய இலக்கிய அடையாளத்தை உயர்த்திக்கொள்ள யாராவது விரும்பினால் அது அவர்களுடைய
தனிப்பட்ட பிரச்சினை.

14. பொதுவாக எழுத்தாளர்களும் அறிவாளிகளும்தான் கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். தமிழில் அவ்வாறு நிகழாதது ஏன்?

கடந்த சில ஆண்டுகளில் தமிழில் பல முக்கியமான பிரச்சினைகளில் தமிழ்
எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். கூட்டறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். பல்வேறு அரசு ஒடுக்குமுறை சம்பந்தமான உண்மை அறியும் குழுக்களில் பங்கேற்றிருக்கிறார்கள். மரண தண்டனை முதலான விஷயங்களுக்கெதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக எழுத்தாளர்களின்
கருத்துக்கள் மதிப்பீடுகளை வெகுசன ஊடகங்கள் பிரதிபலிப்பதில்லை என்பதால் வெகுசன அரசியல் இயக்கங்கள் அவற்றை முன்னிலைப்படுத்துவதில்லை என்பதால் தமிழ் எழுத்தாளர்கள் அபிப்ராயங்கள் இல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல.

15. தமிழில் ஆண் எழுத்தாளர்கள் ஆகட்டும், பெண் எழுத்தாளர்கள் ஆகட்டும் ஏன் விமர்சனங்களை சகித்துக்கொள்வதோ நேர்மறையாக எதிர்வினையாற்றுவதோ இல்லை?

கடந்த ஐம்பதாண்டுகளாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் நடந்திருக்கும்
விவாதங்களுக்கு கருத்தியல் சார்ந்த மோதல்களுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இந்த மோதல்களில் சிலசமயம் தனிமனித கசப்புகள் இருந்திருக்கலாம். ஆனால் சி.சு. செல்லப்பா, க.நா.சு., பிரமிள், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், அ. மார்க்ஸ், தமிழவன், ராஜ் கௌதமன், ஜெயமோகன் என எத்தனையோ விமர்சகர்கள் கோட்பாட்டு ரீதியிலும் அழகியல் பூர்வமாகவும் மிகத் தீவிரமான விமர்சனங்களையும் விவாதங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். அவை பற்றிய ஏராளமான பதிவுகள் தமிழ் சிறுபத்திரிகை வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் பதிவுகளை நீங்கள் கவனித்தால்தான் தமிழில் இலக்கிய இயக்கம் என்பது கோட்பாடு சார்ந்த ஒரு தளத்தில் உருவாக்கப்பட்டதேயழிய அது வெறும் தனிமனித சச்சரவு அல்ல என்பது புரியும். இதுபோன்ற கற்பனைகளை களைய வேண்டுமென்றால் எங்களைப் படித்துப் பார்ப்பதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் கிடையாது.


16. குடும்பம் என்ற அமைப்பைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? குடும்பம் எழுத்தாளர்களின் சுதந்திரத்தை பாதிக்கிறதா?


குடும்பம் என்ற அமைப்பு தம்மளவில் நல்லதோ கெட்டதோ அல்ல. அதன்
குணாதிசயத்தை அதிலிருக்கும் மனிதர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். தவறான அதிகார வெறி கொண்ட மனிதர்கள் ஒடுக்குமுறையான குடும்பங்களையும், சுதந்திர உணர்வு கொண்டவர்கள் இணக்கமான குடும்பங்களையும் உருவாக்குகிறார்கள். எனவே இந்த அமைப்பு குறித்த பொத்தாம் பொதுவான அபிப்ராயங்களை நான் சொல்வதற்கு தயங்குகிறேன். எழுத்தாளனின் சுதந்திரம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினை. குடும்பம் மட்டுமல்ல சாதி, மதம், அரசியல் அமைப்பு, ஒழுக்க நியதிகள் அனைத்துமே கலைஞனின் சுதந்திரத்தை ஓரளவிற்கு கண்காணிக்கவே செய்கின்றன. இந்தக்
கண்காணிப்பை ஒரு எழுத்தாளன் எவ்வாறு மீறுகிறான், அதிலிருந்து எப்படித்
தப்பிச் செல்கிறான் என்பதுதான் கலையின் பிரச்சினை. மேலும் சுதந்திரம் என்பது கலையை உருவாக்குவதில்லை. போராட்டம்தான் உருவாக்குகிறது. வேறுவிதமாகச் சொன்னால் சுதந்திரத்தை நீங்கள் கலையின் மூலம்தான் அடைய முடியும்.

17. தமிழ்ச் சமூகம் பாலியல் சார்ந்த விஷயங்களில் ஒரு பாசாங்கான அணுகுமுறையைக் ஏன் கொண்டிருக்கிறது?

அது பழமையும் அல்லாத நவீனத்துவமுமில்லாத ஒரு சமூகத்தின் பாசாங்குகள். தமிழர்கள் இரண்டு யுகங்களுக்கிடையே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மரபு சார்ந்த ஒழுக்கவியல் மதிப்பீடுகளை ஒருபுறம் சுமக்கிறார்கள். இன்னொரு புறம் நவீன வாழ்க்கையின் எல்லையற்ற சுதந்திரங்களை கொஞ்சம் தொட்டுப்
பார்க்கிறார்கள். இது ஒரு தத்தளிப்பு. இந்தத் தத்தளிப்பு இரட்டை நிலையை
உருவாக்குகிறது. பாசாங்குகளை உருவாக்குகிறது. ஒரே நபர் பாலியல் சார்ந்த விஷயங்களை ஒடுக்குகிறவராகவும், மீறுகிறவராகவும் இருக்கிற அபத்தம் இதனால்தான் நிகழ்கிறது. பாலியல் சார்ந்த சுதந்திரம் என்பது பொதுவாக நமக்கு அறிமுகமாகி யிருக்கிறது. அது அனுபவமாக மாற இந்த சமூகத்தில் எவ்வளவோ மாறுதல்கள் நிகழவேண்டியிருக்கிறது.

18. நீங்கள் காதல், திருமணம் மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

நிறுவனங்கள் காதலை அழிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு காதலும் நிறுவனத்தை நோக்கி வளர்கின்றன. இந்த முரண்பாட்டில் எவ்வாறு ஒருவன் அல்லது ஒருத்தி தன்னுடைய காதலை தக்கவைத்துக் கொள்வது என்பது ஒரு சிக்கலான பிரச்சினை. நம்மால் திருமணம் போன்ற சமூக நிறுவனங்களை ஒழிக்க முடியாது. அதே சமயத்தில்
அந்த நிறுவனங்களை மேலும் காதலும் ஜனநாயகத் தன்மையும் கொண்டதாக எவ்வாறு மாற்றுவது என்பதைப் பற்றியே நான் சிந்திக்கிறேன்.

19. தமிழ் எழுத்தாளர்கள் ஏன் தலித் இலக்கியத்தை மைய நீரோட்டத்தில் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்?

எண்பதுகள் வரை தமிழில் பெருவாரியான எழுத்தாளர்கள் உயர் வகுப்பினரைச் சார்ந்தவர்கள். பெரும்பாலும் பிராமணர்கள். அந்தக் காலகட்டத்தில்கூட அவர்கள் தாங்கள் அறிந்த ஒரு வாழ்க்கையினை எழுதியிருக்கிறார்களே தவிர யாரும் சாதிய மனப்பான்மையினையோ பிறருக்கு எதிரான வெறுப்பையோ வெளிப்படுத்தியவர்கள் அல்ல. எண்பதுகளுக்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்தே பெருவாரியான படைப்பாளிகள் உருவாகி வந்திருக்கிறார்கள். இன்றும் இளம்தலைமுறை படைப்பாளி களில் உயர்சாதியினரைச் சார்ந்தவர்களைக் காண்பதே அரிது. அந்த அளவுக்கு இன்று நவீன இலக்கியப் பரப்பு முழுக்க முழுக்க தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளம் தலைமுறைப் படைப்பாளிகளால் நிரம்பியிருக்கிறது. ஒருவிதத்தில் சொல்லப் போனால் இவர்களே இன்று மைய நீரோட்ட படைப்பாளிகளாக இருந்து வருகிறார்கள். உண்மையில் இவர்களை அங்கீகரிக்கும் அளவிற்கு இலக்கிய அதிகாரம் படைத்த உயர்சாதி எழுத்தாளர்கள் யாரும் இல்லை.

20. நல்ல எழுத்து, மோசமான எழுத்து என்பதை நீங்கள் எந்த அளவுகோலின்படி வரையறுப்பீர்கள்?

நான் நல்ல எழுத்து, கெட்ட எழுத்து என்று வரையறுப்பது இல்லை. அவை
கருத்தியல் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பானவை. நான் இலக்கியத்தை அவற்றின் வழியே அணுகுவதில்லை. என்னைப் பொறுத்தவரை உயிருள்ள எழுத்து, செத்த எழுத்து என்ற இரண்டு பிரிவினைகள்தான் உள்ளன. நாம் வாழுகிற காலத்தின் உணர்வுகளையோ சிந்தனைகளையோ மொழியையோ பிரதிபலிக்காத புதுப்பிக்காத எழுத்துக்களை நான் செத்த எழுத்துக்கள் என்பேன். அவற்றைக் கொண்டாடுவதற்கான செத்த மூளைகள் இருக்கக் கூடும். உயிருள்ள எழுத்து என்பது ஒரு பண்பாட்டையே சலனமுறச் செய்வது, காலத்தின் மீது ஒரு குறுக்கீட்டை நிகழ்த்துவது, அனுபவத்தை
ஒரு ரகசிய விசையின் மூலம் முன்னோக்கிச் செலுத்துவது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இத்தகைய படைப்புகளை உருவாக்கியவர்களே அந்த மொழியின் பிரதானமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதி அத்தகைய ஒரு சக்தி. புதுமைப்பித்தனும் பிரமிளும் ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும்கூட
அத்தகைய சக்திகளே.

21. ‘வாசித்தலின் இன்பம்’ என்ற கருத்தாக்கம் வெகுசன எழுத்துக்களுக்கு
பயன்படுத்தப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


எல்லா கலைப் பிரதிகளும் வாசித்தலின் இன்பத்தைக் கொடுக்கக்கூடியதாக
இருக்க வேண்டுமென்பதே என் குறிக்கோள். அந்த இன்பத்தை உருவாக்காத படைப்புகள் வாசகராலும் காலத்தாலும் கடுமையாக நிராகரிக்கப்பட்டுவிடும். அது எந்த வகையான எழுத்தாக இருந்தாலும் சரி, அதன் முதல் பயன்பாடு வாசகனை குதூகலமும் உவகையும் மனவிரிவும் கொள்ளச் செய்ய வேண்டும். ஒரு பிரம்மாண்டமான துயரத்தைக் குறித்த சித்தரிப்புக்கூட ஒரு வாசகனிடம் முதலில் ஏற்படுத்துவது துயரம் அல்ல. வாசிப்பின் வழியே அது முதலில் ஒரு உள்ளார்ந்த ரகசிய இன்பத்தை ஏற்படுத்துகிறது. அது அறிதலின் இன்பம். பிறகு அதிலிருந்தே அந்தப் பிரதி உருவாக்கும் துயரம் வாசகன் மேல் கவியத் தொடங்குகிறது. இது மிகவும் நுட்பமான, சிக்கலான ஒரு பிரச்சினை. வெகுசன எழுத்துக்கள் கேளிக்கைக்காக மட்டுமே எழுதப்படுகின்றன.
ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதில் கேளிக்கை என்ற அம்சம் இருப்பதே இல்லை. வெகுசன தளங்களில் பலவீனமான புத்திகூர்மையற்ற எழுத்தாளர்களே மலிவான கேளிக்கைகளைத் தொடர்ந்து உருவாக்கி வந்திருக்கிறார்கள். அந்தச் சக்கைகளை வேறு மாற்றுகள் இல்லாததால் வாசகர்கள் தொடர்ந்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் சுஜாதா இதற்கு ஒரு விதிவிலக்கு. வெகுசன எழுத்துக்
களை அதன் அசட்டுத்தனத்திலிருந்து முதலில் விடுவித்தவர் அவர்தான். வெகுசன எழுத்திற்கு நவீனத்துவத்தையும் உற்சாகத்தையும் தனித்துவமான பாணியையும் அவர் உருவாக்கினார். 50 ஆண்டு காலம் அவர் தொடர்ந்து இந்தப் புதுமையை உருவாக்குபவராக இருக்கிறார். சுஜாதாவின் எழுத்துக்கள் வாசிப்பின் இன்பத்தை பெருமளவிற்கு வாசகரிடம் உருவாக்கியவை.

22. உங்களுடைய அரசியல் என்ன? உங்கள் எழுத்தின் அரசியல் என்ன?

நான் அடிப்படையில் இடதுசாரி கொள்கைகளால் வார்க்கப்பட்டவன். பின்னர்
அவற்றின் ஏமாற்றங்களால் சற்றே மனங்கசந்து போனவன். கவிதையில் என்னுடைய அரசியல் என்பது நம்முடைய வாழ்வின் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நுண்ணதிகாரத்தின் வன்முறையை எதிர்கொள்வதாகும்.

23. இன்றைய மனித குலத்தின் பெரும் அபாயமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

மௌனம். அநீதிக்கெதிரான மௌனம்.

24. இந்துத்துவ பாஸிச சக்திகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

ஒரு எழுத்தாளன் என்ற முறையில் ஹிந்துத்தவ பாஸிச சக்திகளை மட்டுமல்ல, எல்லா அடிப்படை மதவாத சக்திகளையும் நான் எதிர்க்கிறேன். அவை மனித சமூகங்களுக்கிடையே தீராத பகையையும் துயரத்தையும் விளைவிக்கின்றன. இந்தியாவில் அத்வானி போன்றவர்கள் என்றால் உலக அளவில் ஜார்ஜ் புஷ்ஷ§ம் பின் லேடனும் மிகப் பெரிய மனித குல விரோதிகள் என்றே நான் குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் வாழ்வுக்கும் கவிதைக்கும் எதிரானவர்கள்.

25. வன்முறை வன்முறைக்கே வித்திடும் என்ற வாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வன்முறைக்கும் அகிம்சைக்கும் இடையே இன்று மனித குலம் தத்தளித்துக்
கொண்டிருக்கிறது. இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. வன்முறை ஒரு சூழல். நீங்கள் எந்தக் கணத்தில் அதன் ஒரு பகுதியாக மாறுகிறீர்கள் என்பதை நீங்கள் நிர்ணயிப்பதில்லை. ஆனால் எந்த நிலையிலும் வன்முறைக்கு நம் மனசாட்சியை இணங்கச் செய்யக்கூடாது. மனசாட்சி ஒரு கணம் அதற்கு இணங்கிவிட்டால் பிறகு என்றென்றும் நாம் கொலைகளையும் ரத்த வெள்ளத்தையும்
நிறுத்த முடியாது.

26. தமிழ் சமூகத்தின் மீது உலகமயமாதலின் தீவிரமான விளைவுகள் என்ன?

மூன்றாம் உலக நாடுகள் முழுக்க எது நடந்ததோ அதுதான் தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் நடக்கிறது. உள்ளூர் வளங்கள் அழிக்கப்படுதல், உள்ளூர் தொழில்கள் நசுக்கப்படுதல், உலகச் சந்தையின் ஒரு காலனியாக தமிழ் சமூகம் மாறுதல் இது ஒரு புறம் என்றால் சில புதிய தொழில் வாளிணிப்புகளும் அதையட்டிய பண்பாட்டு
மாற்றங்களும் இதன் இன்னொரு புறம். ஒருவிதத்தில் தேங்கிப்போன தமிழ்ப் பண்பாட்டு வாழ்க்கையின் மீது உலகமயமாதல் ஒரு புதிய உற்சாகத்தையும் நகர்வையும் உண்டாக்கியிருக்கிறது. ஆனால் இதன் ஆழமான விளைவுகள் நெடுங்காலத்திற்கு நம்மை பாதிக்கப் போகிறவை.

27. தமிழ் சினிமா, அரசியல், அதினாரம் மூன்றுக்குமான உறவை விளக்குங்கள்.

அதை பற்றிச் சொல்வதற்கு புதிதாக ஒன்றும் இல்லை. சினிமா நடிகர்கள் திரையில் பேசுகிற வசனங்கள் கொள்கை முழக்கங்களாகவும், அவர்களது நடத்தைகள் ரோல் மாடல்களாகவும் பாதிக்கப்படுகிற சமூகத்தில் நடிகர்கள் தலைவர்கள் ஆவதும் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் இயல்பான நிகழ்வுகள். தமிழகத்தில்
அரசியல் இயக்கங்கள் தோல்வியடைந்துவிட்டன. அவற்றிற்கு மக்களிடம் எவ்வித செல்வாக்கும் இல்லை. அரசியல் இப்போது சினிமாவைப் போல ஒரு கேளிக்கை. அதனால் இவை இரண்டும் சேர்ந்து அரசியல் அதிகாரத்தை உருவாக்கும்போது ஒட்டுமொத்த சமூகச் சூழலும் கேலியும் அபத்தமும் நிறைந்ததாக மாறிவிடுகிறது

0 எதிர் சப்தங்கள்: