சிற்றிதழ்கள் உருவாக்கும் விவாதங்களும், அதன் விளைவுகளும் படைப்புகளை அடுத்த தளத்துக்கு நகர்த்தும் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன. தீவிர இலக்கியத்தில் சிற்றிதழ்கள் தவிர்க்க இயலாதவை. படைப்பியக்கத்தில் வெகுசன இதழ்களும், இடைநிலை இதழ்களும் செய்யத் தயங்கும் அல்லது செய்யவியலாத எவ்விதமான முயற்சிகளையும் சிற்றிதழால் செய்துவிட முடியும்.
மணல்வீடு முதல் இதழ் வெளிவந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. இதழ் வந்தவுடன் சில கவிதைகளை வாசித்துவிட்டு பதினைந்து நாட்களுக்குப் பிறகாக ஹரிகிருஷ்ணின் "நாயி வாயிச்சீல" என்ற சிறுகதையை வாசித்தேன். அரவாணி தன் வாழ்வில் சந்திக்கும் அவலங்களை துல்லியமாக பதிவு செய்திருக்கும் முக்கியமான சிறுகதை.
தொடர்ந்து மற்ற பகுதிகளையும் வாசிக்கும் போது ஒரு முழுமையான சிற்றிதழாக முதல் இதழில் தன்னை மணல் வீடு நிலை நிறுத்திக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.
குறிப்பிடத்தக்க பரிசோதனை முயற்சிகளாக ராசமைந்தனின் "தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து", ஆதிரனின் "என்றார் கடவுள்" ஆகியன அமைந்திருக்கின்றன.
இசை,இளஞ்சேரல்,சுப்ரபாரதி மணியன், கூத்தலிங்கம், த.ந.விசும்பு, பெருமாள் முருகன், இன்பா சுப்பிரமணியன், நரன், இன்குலாப் மற்றும் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. நரனின் "எறும்புகள் பற்றிய சில குறிப்புகள்", இசை மற்றும் இளஞ்சேரல் ஆகியோரின் கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன.
பா.மீனாட்சிசுந்தரத்தின் வசனகவிதைகள் குறிப்பிடப் பட வேண்டியவை.
பாமா, மதிகண்ணன், செல்வபுவியரசன் ஆகியோரின் சிறுகதைகள், வே.மு.பொதியவெற்பன்,ஆதிரன்-வசுமித்ர ஆகியோரின் படைப்புகள் இடம் பெற்றிருக்கும் இவ்விதழின் வாசிப்பனுவம் சில தளங்களை தொட்டு வருவதாக அமைகிறது.
தலையங்கத்தில்,சிற்றிதழ் மனித மேம்பாட்டிற்கான செயல்தளங்களில் தனக்குரிய பங்களிப்பைச் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று எழுதியிருப்பது கவனிக்கத் தக்கது.
சிற்றிதழின் படைப்புகள் அப்படி அமைந்திருக்கலாம், இப்படி அமைந்திருக்கலாம் என்று கருத்து சொல்வதைப் போன்ற பைத்தியகாரத்தனம் வேறொன்று இருக்க முடியுமா என்று தெரியவில்லை.
சிற்றிதழ் தன் பாதையை தானே அமைத்துக் கொள்ளும் ஓடை. அது ஏற்புகளையும், நிராகரிப்புகளையும் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. அதன் போக்கில் விட்டுவிடுவது நலம். மணல் வீடு தனக்கான பாதையை அமைத்துக் கொள்வதில் எந்தச் சிரமமும் இருப்பதாகத் தோன்றவில்லை.
தொடர்புக்கு:
மு.ஹரிகிருஷ்ணன்,
தொலைபேசி: 098946 05371
மின்னஞ்சல்: manalveedu@gmail.com
Jun 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment