Jun 5, 2008

எண்ணூற்று அறுப‌து டிகிரி புரோட்டா மாவும் மோரு ராம‌சாமியும்

சென்ற வாரம் ஒருநாள் பாண்டியிடம் இருந்து போன் வந்தது ,ஈரோடு ரயில்நிலையத்திற்கு வெளியிலிருக்கும் குஜலி தள்ளுவண்டிக் கடையில் எண்ணூற்று அறுபது டிகிரி புரோட்டா மாவு வைத்திருப்பதாக. "எண்ணூற்று அறுபது டிகிரியை பிரபலப் படுத்தும் வேலையெல்லாம் எப்படி இருக்கிறது ?" என்றும் கேட்டான் பாண்டி. எண்ணூற்று அறுபது டிகிரியை பிரபலப் படுத்துவதற்கு என்ன செய்யலாம் ; என்ன செய்ய வேண்டும் ? வள்ளியாம்பாளையத்திலிருந்து நடராசனும் அதையே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பாலப்பாளையம் ரோட்டோரக் கடையில் எண்ணூற்று அறுபது டிகிரியைப் பார்த்ததாகவும் , இரண்டு பொட்டலம் வாங்கிக் கொண்டு வளையபாளையம் செல்வதாகவும் சொன்னார் சுப்பிரமணி. சுப்பிணிக்கோ அவ‌ன் ம‌னைவிக்கோ ச‌ப்பாத்தி சுடுவ‌தே பெரும்பாடு. புரோட்டா மாவை என்ன‌ செய்வார்க‌ள் என்ற‌ குழ‌ப்ப‌ம் இருக்கிற‌து. இங்கே கரட்டடிபாளையத்தில் உள்ள மூக்குத்தி மளிகைக் கடை போன்ற பிரபலமான மளிகைக்கடை அனைத்திலும் எண்ணூற்று அறுபது டிகிரி கிடைக்கிறது. புஷ்டி இட்லிமாவு , ஆர்.எஸ்.நெய்பால் வெண்ணெய் போன்ற வஸ்துகளின் இடையே ' புதிய வரவுகள் ' என்ற பகுதியில் எண்ணூற்று அறுபது டிகிரியை வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்த போது எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. மாவு ஐட்டங்களில் இட்லி மாவு முதல் ரவாதோசை , பருப்பு தோசை வரை அநேகமாக எல்லா மாவுமே பொட்டலம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதுவுமே ஈரோடு மாவட்ட‌ எல்லையை விட்டே தாண்டவில்லை.

ஈரோடு மாவட்டத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டு வருவதற்கு ஏன் பொட்டலம் செய்யப்பட வேண்டும்? இதில் பல பிரச்சினைகள் உள்ளன. முதலில் , அரைப்பதில் குறைபாடு. இல்லாவிட்டால் மாவுக்கான மூலப்பொருளே மூன்றாந்தரமாக இருக்கும். இது இரண்டுமே சரியாக இருந்தால் பொட்டலம் கட்டும் தாள் படு சாதாரணமாக இருக்கும். வெறுமனே பொட்டலத்தில் வந்து விட்டால் போதுமா ? அதை தமிழ்நாடு முழுவதும் - குறைந்த பட்சம் அவிநாசி , பரமத்தி வேலூர் புரோட்டாக்கடைகள் வட்டத்தில் அதை எப்படிக் கொண்டு சேர்ப்பது ? ஆர்.எஸ். நெய்ப்பாலுக்கு இணைதான் நம்முடைய அசோகா தோசை மாவு. ஆனால் அது கூட ஈரோட்டு எல்லையைத் தாண்டவில்லையே ?

ஆட்டாங்கல்லில் அரைத்தாலும், கிரைண்டரில் அரைத்தாலும் மாவு மாவுதான். எனவே மூக்குத்தி கடையில் புஷ்டி இட்லிமாவு , ஆர்.எஸ்.நெய்பால் வெண்ணெயோடும் எண்ணூற்று அறுபது டிகிரியைப் பார்த்த போது விசேஷமாக ஒன்றும் தோன்றவில்லை. மாறாக , அசோகா தோசை மாவும், நகு நகு ரவா மிக்ஸும் ஏன் அங்கு இல்லை என்ற விசனமே எனக்குள் ஏற்பட்டது.

இப்போது எண்ணூற்று அறுபது டிகிரியை சென்னைக்குக் கொண்டு சேர்க்க என்ன செய்யலாம் ? சரவணா ஸ்டோர்ஸ்க்கு இந்த பொட்டலத்தை அறிமுகப் படுத்தலாம். சரவணாவுக்கு தினசரி 100 பொட்டலங்கள் வந்து கொண்டிருக்கும். இதில் அவர்கள் புரோட்டா என்று கண்டதுமே பொட்டலத்தை எடுத்து ஓரத்தில் வைத்து விடுவார்கள். காரணம் ? புரோட்டா செய்வது எப்படி என வாடிக்கையாளர்களுக்கு விரிவாக விளக்க‌ வேண்டும்.

இங்கே குருமா புரோட்டா கலாச்சாரத்தைக் காப்போம் என்று சத்தம் போடுகிறவர்கள் வெறுமனே குருமாவை மட்டும் மணக்க வைத்தால் விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். புரோட்டா நன்றாக இல்லாமல் குருமா எப்படி வளரும் ? இலக்கம்பட்டி பிரசிடெண்ட் நாராயணசாமி எல்லோராலும் கொண்டாடப் படுபவர். ஆனால் அவருக்குப் பிடித்த உணவு இட்லி சாம்பார். பிடித்த குழம்பு மீன் குழம்பு. பிடித்த ஊறுகாய் மாங்காயாக இருக்கலாம். இந்த ரீதியில்தான் கரட்டடிபாளையம் சமூகத்தின் சாப்பாட்டுத் தளத்தில் இயங்குபவர்கள் அத்தனை பேரும் இருக்கிறார்கள். ஒரு பால்வாடியின் டீச்சரை எடுத்துக் கொள்வோம்(இடுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டாம்). அவருக்குத் தெரிந்த சமையல்காரர்கள் நொண்டிக்கால் நாய்க்கார், சேட்டு. அதிக பட்சம் போனால் தொட்டிபாளையம் ராசு என்று சொல்லலாம். சமகால சமையலில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் அய்யங்கார் , கள்ளிப்பட்டி மணி என்பார். இப்படி இருந்தால் குருமா புரோட்டா கலாச்சாரம் எப்படி வளரும் ? சரவணாக்காரர்கள் எப்படி ஈரோடு மாவட்டத்திலிருந்து பொட்டலம் செய்யப்பட்ட பொட்டலத்தை எடுத்துப் பார்ப்பார்கள் ?

கொண்டலாம்பட்டியில் வசிக்கும் புலம் பெயர்ந்த வட ஆம்பூர் சமையல்காரர்கள் அனைவரும் - குறித்துக் கொள்ளுங்கள் , அனைவரும் ‍சேலத்து புரோட்டாக் கடைகளாலும் , சாப்பாட்டுச் சூழலாலும் மிகப் பெரும் அளவில் கவனிக்கப்படுகிறார்கள். 'அவர்களுக்கெல்லாம் புரோட்டா இரண்டாவது உணவாயிற்றே ?' என்று பதுங்கக் கூடாது.சேலத்தில் வாழும் சாப்பாட்டுப் பிரியர்களுக்கு கொத்துபுரோட்டாத்தானே பொது உணவு? அவிநாசியில் வாழும் கரட்டடிபாளையத்துக்காரர்கள் கொண்டலாம்பட்டியில் வாழும் புலம் பெயர்ந்த வட ஆம்பூர்காரர்களை விட பல நூறு மடங்கு வசதியான நிலையில் இருப்பவர்கள்தானே ? அந்தப் புலம் பெயர்ந்த வட ஆம்பூர்காரர்க‌ளுக்கு புரோட்டா எப்படியோ அப்படித்தானே அவிநாசியில் வாழும் கரட்டடிபாளையத்தார்களுக்கு இறால் குழம்பு? ஆனால் சாதித்தது என்ன ? பொங்கலும் தீபாவளியும் கொண்டாடுவார்கள்...இட்லி சாம்பாரோடு அதுதான் அந்த ஊர்க்காரர்களின் சாதனை.

கொண்டலாம்பட்டியில் உள்ள மளிகைக்கடையில் கடையில் க்யூவில் நின்று ஆச்சி சாம்பார் பொடியை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள் ; ருசி ஊறுகாயை நாக்கில் நக்குகிறார்கள் பார்க்கிறார்கள். இப்படிப் பட்ட அவல நிலையில் அந்நியர்கள் புரோட்டாக் குருமா கலாச்சாரத்தையும் புரோட்டாவையும் எப்படி மதிப்பார்கள் ? ஆனால் அதே கொண்டலாம்பட்டியில் நகரில் வையப்பமலையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் சமையல்காரர்ர் அரைக்கால்டிரவுசர் சண்முகம் அந்த ஊரின் மிக உயர்ந்த சமையல்காரர்கள் சங்கத்ததின் தலைவராக ஆகியிருக்கிறார். விரைவில் இவர் அறுசுவை அரசு ப‌ரிசோ , சாம்யல் சாக்ராவர்ட் விருதோ பெறுவார் என்பது என் யூகம்.

கும்தலக்கடி என்ற மசால் பொடி வேமாண்டம்பாளையத்திலிருந்து வருகிறது. வே.பாளையத்தில் புலம் பெயர்ந்து வாழும் வட ஆம்பூர்காரர்கள் தயாரிக்கும் மசால் பொடி. அந்த பொடியின் வாயிலாக நம்பியூர் சமூகம் முழுமைக்கும் வட ஆம்பூர்க்காரர்கள் தங்கள் திறமையை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பொடியின் தீவிர அபிமானி நான். வே.பாளையத்திலிருந்து யார் வந்தாலும் எனக்காக இந்தப் பொடியின் பாக்கெட்களை வாங்கி வரச் சொல்லுவேன். இப்படி என் நண்பர் ஒருவர் கும்தலக்கடி அலுவலகத்துக்குச் சென்று பழைய பொடி பாக்கெட்களைக் கேட்ட போது அவருடைய தோற்றத்தை வைத்து அவர் கரட்டடிபாளையத்துக்காரர் என்று புரிந்து கொண்ட கும்தலக்கடியின் உரிமையாளர் "இந்தப் பாக்கெட்களெல்லாம் மோரு ராமசாமிக்குத்தானே?" என்று கேட்டாராம்.

என்னுடைய நண்பர் அதிர்ச்சியாகி "எப்படி இவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள் ?" என்று கேட்க , " அவருக்காகத்தான் இப்படி பழைய பாக்கெட்களை அவருடைய சில நண்பர்கள் வாங்கிச் செல்கிறார்கள்" என்று பதில் சொன்னாராம். கேட்பதற்கே உண்மையில் எனக்கு சந்தோஷமாக இருந்தது. (இந்த‌ இட‌த்தை எழுதும் போது என‌க்கு இத‌ய‌த்தில் ஒரு குட்டி டைம்பாம் வெடிக்கிற‌து)

தமிழகம் முழுவதும் புரோட்டாப் பிரியர்கள் பரவிக் கிடக்கிறார்கள். இந்த அளவுக்கு தமிழகம் முழுமையும் பரவிய ஒரு இனம் வேறு எதுவும் இருக்காது என்பது என் அனுமானம். தமிழகம் முழுவதும் எல்லா ஹோட்டல்களிலும் புரோட்டா மாஸ்டர்கள். தமிழகத்தின் மிக முக்கியமான புரோட்டா ஆய்வாளரான காசிபாளையம் கருப்பாயி கொத்துபுரோட்டா பிரியர். ஆனால் இதனாலெல்லாம் புரோட்டா கலாச்சாரத்துக்கோ ,நாட்டுக்கோழி குருமாவுக்கோ ஒரு பயனும் இல்லை. காரணம் , இவர்கள் யாருக்கும் புரோட்டாவின் சம கால ருசி பற்றி எதுவும் தெரியாது.

இத்தகைய விரோதமான ஒரு கலாச்சாரப் பின்னணியில் எண்ணூற்று அறுபது டிகிரியை எப்படி சரவணாவுக்கும் , சென்னைக்கும் கொண்டு சேர்ப்பது ? சரவணாவில் பொட்டலத்திலிருந்த்து கொஞ்சம் மாவு எடுத்து சில புரோட்டாவை செய்வார்கள். அப்படி புரோட்டா செய்து விட்டால் போதும். அதோடு எண்ணூற்று அறுபது டிகிரியை பிரபலப் படுத்தும் வேலையை நாம் நிறுத்தி விடலாம். சரவணா புரோட்டாக்களைத் தின்ற ராமாயக்கா கூறினார் , அதில் இருக்கும் அநேகம் ருசியைவிட விட எண்ணூற்று அறுபது டிகிரி பிரமாதமாக இருக்கிறதே என்று.

அதைத்தான் நான் ஒரு பத்து ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனவே , சரவணாவோடு ஒரு சென்னைக்காரர் மூலமாகத் தொடர்பு கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏஜெண்ட் மூலமாக‌ அனுப்பினால் குப்பைக்குச் சென்று விடும். ஆக , உங்கள் கையில் எண்ணூற்று அறுபது டிகிரி ஒரு ஐந்து பொட்டலங்களாவது தேவை. "அனுப்பி வைக்கட்டுமா ?" என்று ராமாயக்காவிடம் கேட்டேன். திரும்பவும் அந்த கோமதிநாயஹம் கதைதான். என் நண்பர்கள் எல்லோரும் என்னுடைய நலம் விரும்பிகள். ஒரு பொட்ட்லமே போதும் என்று சொல்லி விட்டார் ராமாயக்கா. அந்த ஒரு பிரதியையே அரிசிமாவோடு கலந்து எடுத்து எல்லா இடங்களுக்கும் அனுப்பி வைப்பார் போலும். "ம்...உங்கள் தலை...நானே செய்து கொள்வேன் கொள்வேன்" என்றார். ம் , அதுவும் சரிதான்.

கொஞ்சம் சீரியஸாக யோசியுங்கள் , என்ன செய்யலாம் என்று...

Disc: இந்த‌க் க‌ட்டுரைக்கும் இந்த‌க் க‌ட்டுரைக்கும் எந்த‌ச் ச‌ம்ப‌ந்த‌முமில்லை. என்னை ந‌ம்புங்க‌ள் ப்ளீஸ்

5 எதிர் சப்தங்கள்:

கதிர் said...

:))

சென்ஷி said...

:))


டிஸ்கிய போடாம இருந்திருந்தா ஒரு வேளை நம்பியிருந்தாலும் நம்பியிருந்திருப்பேன் :))

ஆனாலும் உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது..

வானம்பாடி said...

:D

Vaa.Manikandan said...

நன்றி தம்பி, சென்ஷி மற்றும் சுதர்சன்.

ஒரு வயித்தெரிச்சல் மாமணியின் அனாமதேய பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது.

பாண்டித்துரை said...

மணி சாருவிற்கு disc ஒரு அனுப்பினிங்களா?