Sep 5, 2007

என் தோட்டத்தின் பூக்கள் நிறங்களை இழந்துவிட்டன.

(1)
பறவைகள் நிசப்தத்தை விட்டுச் சென்றிருக்கும்
என் தோட்டத்தின் பூக்கள் நிறங்களை இழந்துவிட்டன.

உதிர்ந்து கிட‌க்கும் மெளன‌ங்க‌ளை பொறுக்கும் கிழவிக்கு
தெரிந்திருக்கிற‌து எல்லாமும்.

சிரிப்புக‌ளால் நிர‌ப்ப‌ முய‌ன்று தோற்றுப் போகிறார்க‌ள்
வ‌ந்து செல்லும் சிறார்கள்.

உன் வாச‌ம் ஒட்டியிருக்கும் செடியிலைக‌ள்
உதிராம‌ல் இருக்க‌ என் க‌ட‌வுளை பிரார்த்திக்கிறேன்.

என் குரலைக் கேளாம‌ல்
ரோஜா செடியொன்றை ந‌ட்டு வைக்கிறான். ஒரு சிவ‌ப்பு ரோஜா
மெலிதாக‌ சிரிக்கிற‌து.
அல‌ட்சியமாக‌. மிக‌ அல‌ட்சிய‌மாக.

----------------------------

(2)
தனித்து விடப்பட்டிருக்கும் இந்த‌ப் ப‌ற‌வையின்
நகரத்தில் மட்டும் காற்று வீசுவதில்லை.
வெளியெங்கும் வியாபித்திருக்கும்
ஏமாற்றத்தின் கவிச்சை வெம்மையில்
சிறகுகளை அமைதிபடுத்த ஒரு கிளையின்றி பதறுகிறது.

நீ வீசிச் சென்ற சொற்களின்
சிதறலைத்தேடி பறந்து கொண்டேயிருக்கும்
அத‌ன்
அறிந்து கொள்ள‌ முடியாத
ஞாப‌க‌ அடுக்கிலிருந்து
சொற்களின் எழுத்துக்கள்
மரணப் பிடியிலிருப்பவனின்
உச்சரிப்பாக விழுகின்றன.

----------------------------------

(3)

அமைதி நுழைய முடியாத‌
இந்த நகரத்தின் மயானத்தில
இரண்டு சிறுவர்கள் விளையாடுகிறார்கள்.
ஒரு குருவி க‌த்திக் கொண்டிருக்கிற‌து.
மூன்று ஆண்க‌ள் சூதாடுகிறார்க‌ள்.
ஒருவ‌ன் சுவ‌ரோர‌ம் சிறுநீர் க‌ழிக்கிறான்.

ச‌வ‌த்தை எடுத்து வ‌ருகிறார்க‌ள்.

க‌ண‌ ஸ்த‌ம்பிப்புமின்றி தொட‌ர்கிற‌து.
எல்லாமும் எல்லாமுமாக.

-----------------------------

(4)
வேதனைகளால் நிரம்பிய கோடையின் இரவு ஒன்றை
கடவுளிடம் கொடுக்கிறேன்.
கசகசப்பில் அருவருப்படையும் கடவுள
இரவின் அடர்த்தியைக் குறைத்து.
சாரல் மழையோடு
மெலிதாக காற்று வீசச் செய்கிறார்.

இருந்தும


கோடையின் இரவில் உறங்க‌ முடிவதில்லை
எழுத முடிவதில்லை
நினைக்க முடிவதில்லை.

எதுவுமியலவில்லை என புலம்ப முடிகிறது.

-----------------------------------

(5)

மண்கட்டியில் தனித்துவிட்ட
ஒற்றை புல் மெல்ல அசைகிறது.
பனியீரத்தில் நனைந்து கிடக்கிறது தரை.
டி.வி பெண் ஓயாம‌ல் பேசுகிறாள்.
இந்த‌க் குழ‌ந்தைக்கு எந்த‌ப் பிர‌க்ஞையுமில்லை.

கொஞ்ச‌ம் விஷ‌ம் த‌ருகிறீர்கள்
என் பங்குக்கு
நானும் தருகிறேன்.

ப‌ருகிக் கொண்டிருக்கிறோம் இருவ‌ரும்.



நன்றி: உயிர் எழுத்து

2 எதிர் சப்தங்கள்:

ஹரன்பிரசன்னா said...

நல்ல கவிதைகள்.

Anonymous said...

வா மணிகண்டா வா