Jun 10, 2007

ம‌னுஷ்ய‌ புத்திரன்: நேர்காண‌ல்-II

1. நவீன தமிழ் இலக்கியத்தின் சமகால போக்குகள் குறித்து கூறுங்கள்

நவீன தமிழ் இலக்கியம் எப்போதும் பல்வேறு பாதைகளையும் திசைவெளிகளையும் கொண்டதாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு புதிய அலை நவீன தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் தீவிரமான சலனங்களை ஏற்படுத்தி வந்திருப்பதை நாங்கள் பார்க்கிறோம். நவீனத்துவம் உருவாக்கிய இலக்கியப் பிரதிகளும் விமர்சனங்களும் எண்பதுகள் வரை தமிழில் கோலோச்சின. புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி, அசோகமித்திரன்,
தி. ஜானகிராமன்,ஆதவன்,வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற நவீனத்துவத்தின் உச்சங்களைத் தொட்ட படைப்பாளிகளின் சாதனைகளைத்தான் அதுவரை தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் வரும் இளம் படைப்பாளிகள் மேல் பெரும் நிழலாக விழுந்துகொண்டு இருந்தது. அந்த நிழல்களைச் சார்ந்தே மொத்த தமிழ் இலக்கியமும் நகர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் எண்பதுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியம் பெரும் உடைவுகளின் மாற்றங்களின் விளைநிலமாக மாறிவிட்டது என்று கூறலாம். இலக்கியம் குறித்த அதுவரையிலான நம்பிக்கைகளும் ஒழுங்குகளும் தீவிரமாகக் கலைத்துப் போடப்பட்டன. மேஜிக்கல் ரியலிச, பின்நவீனத்துவப் படைப்புகள் சார்ந்த அறிமுகமும் அதுகுறித்த விவாதங்களும் புதிய படைப்பியல் சார்ந்த கேள்விகளை எழுப்பின. தமிழில் நவீனத்துவம் சார்ந்த பெரும் படைப்பாளிகள் இயங்கிய காலகட்டத்திலேயே நவீனத்துவம் உருவாக்கும் எல்லைகளை மீறிய, அவற்றில் சிறிய உடைப்புகளை ஏற்படுத்திய படைப்பாளிகளாகபுனைகதையில் மௌனி, லா.சா. ராமமிர்தம், நகுலன் ஆகியோரும் கவிதையில் பிரமிளும் செயல்பட்டனர். இவர்கள் எண்பதுகளில் உருவாகிய புதிய அலைக்கு ஒருவிதத்தில் மானசீகமான முன்னோடிகள் என்றும் கூறலாம். ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும் கோணங்கியும் சாரு நிவேதிதாவும் புதிய கதை மொழியினைத்தீவிரமாகப் பரிட்சித்துப் பார்த்த முதன்மையான படைப்பாளிகளாக உருவெடுத்தனர். இவர்கள் தங்களுக்குப் பின்வந்த அத்தனை இளம் கதைசொல்லிகளையும் பாதித்தனர் என்றால் அது மிகையில்லை. நகல்களும் போலி செளிணிதல்களும் ஒருபுறம் நடந்தபோதும்,இன்னொரு புறம் தமிழ்க் கதையை விதம்விதமான வேடிக்கைகளின் பரிசோதனைகளின் களமாக இவர்கள் மாற்றினர். இவர்களோடு செயல்பட்ட படைப்பு மற்றும் கோட்பாடு சார்ந்த பலர் பின்னர் இலக்கியத்திலிருந்தே முற்றாக விலகிச் சென்றனர். சில்வியா,நாகார்ஜுனன் என்று காணாமல் போனவர்களின் ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. புனைகதையில் நிகழ்ந்த இத்தகைய வெளிப்படையான உடைப்புகள் எதுவும் நவீன கவிதையில் நிகழவில்லை. கோட்பாட்டுவாதிகளால் தமிழ்க் கவிதை தீவிரமாககுறுக்கீடு செய்யப்படாததும் அதன் நீண்ட மரபும் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ்க் கவிதை மிகத் தீவிரமாக நகர்ந்துகொண்டே இருக்கிறது.

நவீன கவிதையின் துவக்கக் காலத்தில் கோலோச்சிய உருவகம், படிமம் போன்றவை பிற்காலக் கவிஞர்களால் பெரும் சுமைகளெனக் கருதப்பட்டு உதறப்பட்டன. கவிதை மேலும் மேலும் நேரடித் தன்மையையும் தமிழ் வாழ்வின் யதார்த்தத்தை நெருங்கிச்செல்வதாகவும் மாற்றமடைந்தது.
90களை இலக்கியத்தில் அரசியல் இயக்கங்களின் காலகட்டம் எனலாம். குறிப்பாக தலித்தியமும் பெண்ணியமும் பெரும் விவாதப் பொருளாக இக்காலகட்டத்தில் மாறின. இலக்கியத்தில் இப்போக்குகள் தீவிரமாக வெளிப்பட்டன. தமிழில் குரலற்றவர்கள் முதன்முதலாக தங்களின் குரல்களை இலக்கியத்தில் பதிவு செய்தார்கள்.அதுவரை நவீன தமிழ் இலக்கியம் என்பது உயர்சாதியிலிருந்து வந்தவர்களாலேயே பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வந்தது.

புதிதாக கல்வியும் அரசியல் வலிமையும் பெற்ற சமூகப் பிரிவினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அவமானங்களையும் சமூக தளத்தில் எதிர்த்துப் போராடியது போலவே இலக்கியத்திலும் உக்கிரமான குரல்களை எழுப்பினர். புனைகதைகள் பெண்ணியத்தின் போக்குகள் பெரிய அளவிற்கு உருவாகாத போதும் ஒரு புதிய தலைமுறை பெண் கவிஞர்கள்தமிழில் தனித்த அடையாளங்களுடன் உருவாகினர். அவர்களின் இலக்கியப் பிரதிகளைச் சுற்றி இடையறாத சர்ச்சைகளும் கேள்விகளும் தொடர்ந்து எழுப்பப்பட்டன. தலித்தியமும் பெண்ணியமும் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய அமைதியின்மைகள் படைப்பின் புதிய சாத்தியப்பாடுகளை இன்று திறந்துவிட்டுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் சற்றே மந்தமான ஒரு சூழல் நிலவுவதாகத் தோன்றுகிறது. இன்று இளைய தலைமுறையினரிடம் பெரும் நம்பிக்கைக்குரிய குரல்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. படைப்பு ரீதியான செயல்பாடுகளைவிட ஊடகம் சார்ந்த செயல்பாடுகள் எழுத்தாளர்களின் முக்கிய பணியாக மாறிவருகிறது. இலக்கியத்தை ஆதாரமான இலட்சியமாகக் கொண்ட தலைமுறை அல்ல இது. 90களில் உற்சாகமாக விவாதிக்கப்பட்ட கோட்பாடுகள் இன்று பலவீனமடைந்துவிட்டன. சமூகத்தில் லட்சியவாதம் எல்லா இடங்களிலும் மடிந்துவிட்டதுபோல் இலக்கியத்திலும் மடிந்துவருகிறது. நான் அவநம்பிக்கையை பிரதிபலிக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில்இலக்கியம் சார்ந்த கேள்விகள் எவை என்பது குறித்து ஒரு குழப்பமான இடத்தை வந்து சேர்ந்திருக்கிறோம்.

2. தமிழ் கலாச்சார வெளியில் இலக்கியம் விளிம்பு நிலையில் இருப்பதற்கு குறிப்பான காரணங்கள் எதுவும் உண்டா?

அந்தக் காரனங்கள் எங்களது ஒரு நூற்றாண்டு அரசியல் வரலாற்றோடுதொடர்புடையவை. மிகவும் வெளிப்படையானவையும் கூட. திராவிட இயக்க அரசியல் ஒரு விழிப்புணர்வு இயக்கமாக தமிழில் உருவான போதும் அது தமிழில் மரபின் சாதகமான அம்சங்களை நிராகரித்துவிட்டது. அது மட்டுமல்ல அதுநவீனத்துவத்திற்கும் எதிரானதாக இருந்தது. அதேபோல இடதுசாரி இயக்கங்கள் இங்கு ஒரு சிந்தனாபூர்வமான அறிவுலக மறுமலர்ச்சியைக் கொண்டு வருவதற்கு பதில் உள்ளீடற்ற அரசியல் இயக்கமாக மாறிவிட்டன. திராவிட இயக்கத்தினரைவிட மிகக் கடுமையான போக்குகளை நவீனத்துவத்திற்கு எதிராக இடதுசாரிகள்மேற்கொண்டனர். அவர்களால் நவீன தமிழ் இலக்கியத்தில் உருவான புதியபோக்குகளை புரிந்துகொள்ளவோ உள்வாங்கவோ முடியவில்லை. அவை தனிமனித கலையின் சீரழிவுகள் என வாதாடினர். இவ்வாறு திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம் இரண்டுமே வெகுசன தளத்திலிருந்து நவீன இலக்கியம் அகற்றப்படுவதில் முக்கியப் பங்காற்றின.

திராவிட இயக்கம் ஊடகங்களிலும் கல்வி அமைப்புகளிலும் நவீன இலக்கியப் போக்குகஷீமீ பிரதிபலிக்கப்படாமல் போனதில் பெரும் பங்காற்றியிருக்கிறது. ஒரு சமூகம், ஊடகங்களாலும் கல்வி அமைப்புகளாலும்தான்பயிற்றுவிக்கப்படுகிறது. அவையுடனான தொடர்பிலிருந்து நவீன இலக்கியம் துண்டிக்கப்பட்ட பிறகு அவை விளிம்பு நிலைக்குத் தஷீமீளப்படுவது மிகவும் ஒரு இயற்கையான நிகழ்வு. தமிழில் அதுதான் நடந்தது. பிறகு போலியான முற்போக்கு கோஷங்கள் சிந்தனையின் தளத்தையும் பண்பாட்டுக் களனை சினிமாவின் கேளிக்கையும்கைப்பற்றிக் கொண்டுவிட்டன. உண்மையில் இவை இரண்டும் ஒன்றே என்றுகூட சொல்லலாம். எங்கும் காயடிக்கப்பட்ட சமூகத்தின் சிந்தனையும் மொழியும் கோலோச்சின. நவீன நாடகம், நவீன இலக்கியம், நவீன சினிமா அனைத்தும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு, வெகுசன கலைகளும் அரசியலும் தமிழர்களின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையினை கைப்பற்றிக் கொண்டது. உண்மையில் தமிழின் பிரம்மாண்டமான இலக்கிய மரபையும் செழுமையையும் இன்று தூசுகளும் கரித்தூள்களும் கவிந்துகொண்டிருக்கின்றன. இந்தக் காட்சி மிகப் பெரிய மனச்சுமையைஏற்படுத்துவதாக இருக்கிறது.

3. சமூக அரசியல் இயக்கங்களில் தமிழ் எழுத்தாளர்கள் ஏன் பங்கேற்க மறுக்கிறார்கள்?

எந்த சமூகத்தில் அல்லது எந்தக் காலகட்டத்தில் எழுத்தாளர்கள் இத்தகைய இயக்கங்களில் பங்கேற்கிறார்கள் என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஒரு எழுத்தாளனின் சமூக இருப்பை எந்த சமூகம் அங்கீகரிக்கிறதோ, எந்தப் பண்பாட்டு வாழ்க்கையில் ஒரு கலைஞனின் குறுக்கீடுகள் சாத்தியப்படுகிறதோ அங்குதான் அவனது அரசியல் பங்கேற்பு சாத்தியமாகிறது. தமிழில் துரதிர்ஷ்டவசமாக அரசியலில்போலி மேதைகளும் போலி அறிஞர்களும் போலி சிந்தனாவாதிகளும் போலிகலைஞர்களும் முக்கியத்துவம் பெற்றனர்.

சிலசமயம் அதிகாரத்தையும் பெற்றனர். ஒரு இயக்கத்தில் கலைஞர்களோ சிந்தனாவாதிகளோ இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சினையல்ல. அது ஒரு வெற்றிடம் அல்லது இடைவெளி. அந்த இடைவெளியை எந்த நேரமும் யாராவது ஒரு சிந்தனையாளனோ கலைஞனோ நிரப்பக்கூடும். ஆனால் போலிகள் அந்த இடத்தில் அமர்ந்து இருப்பது மிகவும் ஆபத்தானது.

அவர்கள் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். சமூகத்தின் கலை மற்றும் அறிவு சார்ந்த மதிப்பீடுகளை அவர்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். இத்தகைய போலிகளால் அரசியல் இயக்கத்திலிருந்தும், சமூக இயக்கத்திலிருந்தும் அசலான கலைஞர்களும், சிந்தனாவாதிகளும் தொடர்ந்து அகற்றப்பட்டனர். அவர்களுக்கான கதவுகள் மூடப்பட்டன. எழுத்தாளர்களின் அபிப்ராயங்கள் முக்கியமல்ல. அவை சிலநூறு பேர்களுக்காகச் சொல்லப்படுபவை. அபிப்ராயங்களைஒரு சினிமா நடிகனோ, ஒரு சினிமா பாடலாசிரியனோ அல்லது ஒரு வெகுசன எழுத்தாளனோ மட்டுமே சொல்ல முடியும். தீவிரமான எழுத்தாளர்கள் சிந்தனையாளர் களின் பெயர்கள் கூட வெகுசன தளத்தில் இயங்குபவர்களுக்குத் தெரியாது. இந்தப் பிரம்மாண்டமான இடைவெளிக்குள் எழுத்தாளர்களின் அரசியல் பங்கேற்பு என்பதுஒரு கற்பனையான விஷயம்தான்.

4. திராவிட அரசியல் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாதிப்பு என்ன?

திராவிட இயக்கம் உண்மையில் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து அசலாக எதையும் பெற்றுக்கொள்ளவும் இல்லை. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அது எதையும் கொடுக்கவும் இல்லை. உண்மையில் அது மரபைக் கொஞ்சம் சுரண்டியது. நவீனத்துவத்தை இருட்டறைக்கு அனுப்பியது. இதுதான் திராவிட இயக்கத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்குமான தொடர்பு. அது உருவாக்கிய இலக்கியப் பிரதிகள் அனைத்தும் அவை உருவான காலத்திலேயே ஈசல்களைப் போல மடிந்துவிட்டன. உண்மையில்அவை இலக்கியப் பிரதிகளே அல்ல. மேடைச் சொற்பொழிவுகளை உருவாக்கின. சொற்பொழிவுகள் காற்றில் கரைவது இயற்கையான விஷயம். இன்று இலக்கியம் சார்ந்த விவாதங்களில் இடதுசாரிகளை ஒரு தரப்பாக எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் திராவிட இயக்கத்திற்கு அப்படிப்பட்ட ஒரு இடம்கூட கிடையாது.

5. ஒரு கவிஞனின் அல்லது கவிதையின் சமூகப் பாத்திரம் என்னவென்று கருதுகிறீர்கள்?

இந்தக் கேள்வி சமூகத்தையும் கவிதையையும் எதிர்நிலையில் நிறுத்துகிறது. அந்த வகையில் இந்தக் கேள்வியை நான் அர்த்தமற்றது என்று சொல்வேன். புராதன பழங்குடிகள் இயற்கையை எவ்வாறு மந்திரங்களை உருவாக்கினார்களோ அதேபோல் தான் வாழ்க்கையை நோக்கி நானும் சொற்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.என்னைப் பொறுத்தவரை சமூகம் என்பது ஒரு அரசியல்ரீதியான கற்பனை. மனிதர்களை ஒரு கூட்டமாக ஒரு மந்தையாக சில பொதுநலன்களுக்கும் ஒழுங்குகளுக்கும் உட்பட்டவர்களாக உருவகிக்க விரும்புபவர்கள்தான், சமூகம் என்ற கற்பனையை தொடர்ந்து உருவாக்குகிறார்கள். அவர்களே இந்தக் கவிதை சமூகத்திற்கு என்ன பங்காற்றுகிறது, இந்தக் கவிஞனுக்கும் சமூகத்திற்கும் என்ன உறவு என்று கேட்கிறார்கள்.நீங்கள் சமூகம் என்று உருவாக்குகிற கற்பனையை கலைப்பதுதான் என்னுடையகவிதையின் பணியாகக் கருதுகிறேன். இந்தக் கற்பனை ஒரு புகைமூட்டம். இந்தப் புகைமூட்டத்தைக் கடந்து ஆழம் காணமுடியாத இருளில் உறைந்த மனித இதயங்களைத் தொடவே இந்தச் சொற்களை உருவாக்குகிறேன். அவ்வாறு தொடுவதன் மூலம் அவர்களுக்கு எது நடந்ததோ அவற்றிற்கு புதிய அர்த்தங்களையும் சொற்களையும்என் கவிதையின் மூலம் கொடுக்கிறேன். வேறுவிதமாகச் சொன்னால் நம்முடைய மதங்கள், அரசியல் இயக்கங்கள், ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் மனிதர்களின் சொற்களைத் தொடர்ந்து கொலை செய்கின்றன. அவற்றை அர்த்தமற்றதாக்குகின்றன. எப்போது உங்கள் சொற்கள் கொல்லப்படுகின்றனவோ அப்போது நீங்கள் உங்கள்அனுபவத்திலிருந்தே அந்நியப்படுத்தப்பட்டுவிடுகிறீர்கள்.

ஒரு கலைஞனின் வேலை உங்கள் அனுபவத்தை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பதுதான். உங்கள் சொற்களை உங்களுக்கு மீட்டுக்கொடுப்பதுதான். கவிதையின் சமூகப் பணி அல்லது பாத்திரம் என்று நான் இதைத்தான் கூற விரும்புகிறேன். வெளிப்படையான சமூக அரசியல் கடமைகளை கலைஞனிடம் நிர்ப்பந்திப்பவர்கள் அவனுடைய ஆதாரமானசெயல்பாட்டை அழிக்கவே விரும்புகிறார்கள்.

6. ஒரு கவிதை எழுதும் அனுபவத்தை உங்களால் விவரிக்க முடியுமா?

அது ஒரு காதலின் வெவ்வேறு தருணங்களுக்கு நிகரானது. சிலசமயம் அது ஆழ்ந்த மனநெகிழ்ச்சி. சிலசமயம் உக்கிரத்தின் நடனம். சிலசமயம் கசகசப்பும் எரிச்சலும். சிலசமயம் அது ஆழ்ந்த மௌனம். சிலசமயம் அது ஒரு நீண்ட உரையாடல். எழுதும்போது எப்போதும் ஒரேவிதமான நிலைகள் நமக்குக் கிடைப்பதில்லை. அது உண்மையில் ஹ்ருதயத்தின் முரண்பட்ட விதிகளாலும் தாளகதிகளாலும் ஆனது.அந்த அனுபவத்தின் பொதுஅம்சமாக ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லலாம், அது எப்போதும் ஒரு கனவின் அல்லது பித்துநிலையின் மங்கலான ஒரு பேதநிலையினை உருவாக்குகிறது. அந்த மங்கியக் காட்சிகளை பதற்றத்துடன் பின்தொடர்ந்து செல்வதுதான் எழுத்து சார்ந்த என்னுடைய அனுபவம்.

7. உங்கள் வாழ்க்கையில் கவிதை எதுவாக இருக்கிறது?

அதை ஒரு வழிமுறை என்று நான் கூறுவேன். இந்த உலகில் மனிதர்கள் வெவ்வேறு விதமான பாதைகளில் தங்களைக் கொண்டு செலுத்துகிறார்கள். என்னுடைய உபாயம்கவிதை. நான் அதற்குள் பறவைக்காக காத்திருக்கும் ஒரு வேடனைப் போல எப்போதும் காத்திருக்கிறேன். அந்தக் காத்திருப்பு முடிவற்றது. உண்மையில் கவிதை எனது கண்களை ஒரு வேட்டைக்காரனின் கண்களாக மாற்றிவிட்டது. அது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் படிமங்களாகவும் குறியீடுகளாகவும் காட்சிகளாகவும் மாற்றி கைப்பற்றமுனைகிறது. ஒருவிதத்தில் இது ஒரு கோணல்தான். ஆனால் இந்தக் கோணலிலிருந்து கலையின் எல்லா சாத்தியங்களும் தொடங்குகின்றன.

8. நவீன தமிழ்க் கவிதை ஏன் எப்போதும் அந்தரங்கமான தொனியிலேயே அமைந்திருக்கிறது?

அதற்கு ஒரு மரபு இருக்கிறது. அது மிகத் தொன்மையான காலத்திலிருந்தேஇலக்கியப் பிரதிகளையும் மனித அனுபவத்தையும் அகம், புறம் என்றுதான் பிரிக்கிறது. ஆனால் இந்தப் பிரிவினை நவீன யுகத்தில் ஒரு கொச்சையான அரசியல் பிரிவினையாக மாறிவிட்டது. தனிமனிதனை பேசுகிறவர்கள், சமூகத்தை பேசுகிறவர்கள் என்றகற்பனையான பிரிவினைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு பொய்யான பிம்பம். தமிழில் எழுதுபவர்களில் அரசியல் கோஷங்கள் எழுதுவதற்காக இன்குலாபை சமூகக் கவிஞர் என்றும், நவீன இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஞானக்கூத்தனை தனிநபர்வாதம் பேசுபவர் என்றும் சொன்னால் அதைவிட வேறு அபத்தம் ஒன்றும் இல்லை. உண்மையில் பிரமிள், ஞானக்கூத்தன், நகுலன், கலாப்ரியாபோன்ற மூத்த தலைமுறை நவீன கவிஞர்கள் தமிழ் வாழ்க்கையின், தமிழ்ச் சமூகத்தின் பல பக்கங்களை முதன்முதலாக இலக்கியப் பரப்பிற்குஷீமீ கொண்டுவந்தார்கள். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட போது புரட்சிகர சமூகக் கவிஞர்கள் அனைவரும் தன் மௌனத்தின் எலி வலைக்குள் பதுங்கிக்கொண்டபோது தனிமனித துயரங்களையும்அந்நியமாதலையும் தீவிரமாக எழுதிய ஆத்மாநாம் தான் அதை எதிர்த்து கவிதைகள் எழுதினார். இன்றளவும் ஆத்மாநாம் நெருக்கடிநிலை போது எழுதிய அரசியல் கவிதைகள்தான் தமிழின் முதன்மையான அரசியல் கவிதைகளாக இருக்கின்றன.

தமிழகத்தில் ஜெயலலிதா அரசு சட்டவிரோத ஆட்சியை தீவிரமாக நடத்தியபோது அதை எதிர்த்து ‘அரசி’ நெடுங்கவிதையை எழுதினேன். அது வாசர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால் நான் அதிகாரபூர்வமான அரசியல் கவிஞன் அல்ல. உண்மையில் தனிமையின் இருட்டை மிக அதிகமாக எழுதிய கவிஞர்களில் நானும் ஒருவன். ஆனால் ஜெயலலிதா அரசிற்கெதிரான முதல் கவிதையை நான்தான்பதிவு செய்தேன். உண்மையில் நவீன கவிஞர்களின் சமூகப் பற்றை கேள்வி கேட்பவர்கள் தங்களுடைய இலக்கியம் சார்ந்த பலவீனங்களை அரசியல் முகமூடிகளால் மறைத்துக் கொஷீமீபவர்கள் மட்டுமே.

9. நீங்கள் தமிழின் மிக முக்கியமான இலக்கிய இதழான உயிர்மையின் ஆசிரியராக இருக்கிறீர்கள். இந்த அனுபவத்தைக் கொஞ்சம் விளக்க முடியுமா?

ஒரு பத்திரிகையாளனாக அது ஒரு வெற்றிகரமான சவால். ஒரு வாசகனாக மகிழ்ச்சியூட்டும் ஒரு அனுபவம். ஒரு எழுத்தாளனாக அது ஒரு தண்டனை. உண்மையில் மூன்று ஆண்டில் தமிழில் வாசகர்களால் மிகவும் கொண்டாடப்படுகிற ஒரு இதழாக உயிர்மை தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. தமிழின் தீவிரமான படைப்பாளிகளில் பெரும்பாலானோர் உயிர்மையில் தொடர்ந்து பங்களித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடையிலான மன வேற்றுமைகளை உயிர்மை பொருட்படுத்தியதே இல்லை. அதில் பங்கேற்கிற ஒவ்வொருவரையும் அது தன்னுடைய பத்திரிகை என உணரச் செய்வதுதான் உயிர்மையின் வெற்றி. அதன் ஆசிரியருக்கு பொறுப்புகள் உண்டே தவிர அதிகாரம் சார்ந்த செயல்பாடுகள் இல்லை. அவருக்கு அதன்வழியே தன்னை முன்னிலைப்படுத்தக்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. நான் என்னுடைய கவிதைகளைச் சார்ந்து வாழ்பவன். அந்த வகையில் உயிர்மைக்கான பொறுப்புகளை கவனத்துடன் நிறைவேற்றுபவனாகவும் அது இயல்பாக உருவாக்கக்கூடியஅதிகாரத்திலிருந்து என்னை விலக்கிக்கொள்பவனாகவும் இருந்து வந்திருக்கிறேன். எழுத்தாளர்களுடனும் வாசகர்களுடனும் இடையறாத உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் பெரும் அனுபவத்தை உயிர்மை எனக்குக் கொடுத்திருக்கிறது.
அதுதான் அதன்வழியே நான் அடையும் அனுபவமும் ஆதாயமும்.

10.தமிழ் பெண் கவிஞர்களான சல்மா மற்றும் லீனா மணிமேகலை இங்கே கேரளாவில் வெளிவந்த நேர்கணால்களில் உயிர்மை பெண்களுக்கு எதிரான ஒரு பத்திரிகை மற்றும் உயர்சாதி மனோபாவத்தை வெளிப்படுத்தும் பத்திரிகை என்ற ரீதியில் அபிப்ராயத்தைபதிவு செய்திருக்கிறார்களே, இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

மேற்சொன்ன இருவருமே என்னால் இலக்கிய ரீதியாக வழி காட்டப்பட்டவர்கள். இலக்கியத்தின் சவால்களை அவர்களிடம் நான் வலியுறுத்தியபோது அதை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களிலும் அரசியலிலும் தஞ்சம் தேடி ஓடிப் போனவர்கள். அவர்களுக்கு வாசிப்புப் பழக்கமோ, இலக்கியம் சார்ந்த பயிற்சியோ இருந்ததில்லை. இதுபோன்ற நபர்கள் ஒரு மொழியின் இலக்கியச் செயல்பாடுகள் குறித்து இன்னொருமொழியில் அபிப்ராயம் சொல்ல வருவதுதான் தமிழின் அவலங்களில் ஒன்று.

*****************
மனுஷ்ய புத்திரனின் இந்தப் பேட்டி மலையாள பத்திரிக்கை ஒன்றிற்காக பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்தவர் T.D.ராமகிருஷ்ணன். இதன் மற்றொரு பகுதியை அடுத்த பதிவாக பதிக்கிறேன்.
*****************

1 எதிர் சப்தங்கள்:

தென்றல் said...

நன்றி, மணிகண்டன்!