Jul 12, 2008

வல்லினம் சிற்றிதழ்

வல்லினம் என்ற சிற்றிதழ் வருகிறது என்பது தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் வாசித்ததில்லை. சென்ற வாரத்தில் கே.பாலமுருகன்**, சந்திக்க வந்திருந்த போது வல்லினம் இதழ் ஒன்றை கொடுத்தார்.

வல்லினம் மார்ச்-மே'2008 கவிதை சிறப்பிதழாக வந்திருக்கிறது.

வல்லினத்தில் தொடர்ச்சியாக இடமளிக்கப்படும் ஆக்கங்கள் பற்றி எனக்கு எந்த அறிவும் இல்லை என்பதால் அது பற்றி சொல்வதற்கில்லை. கையில் இருக்கும் இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள் பற்றி எனக்கான சில கருத்துகள் உண்டு

தலையங்கத்திற்கு அடுத்து வரும் முதல் படைப்பு பா.அ.சிவத்தின் நேர்காணல். அவர்தான் வல்லினத்தின் துணை ஆசிரியர். ஆசிரிய‌ரின் ப‌டைப்பே இதழில் முக்கிய‌த்துவ‌த்துட‌ன் இட‌ம் பெறுவ‌து நெருட‌லாக‌ இருந்த‌தது. சில‌ க‌ருத்துக்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வை என்றாலும் இல‌க்கிய‌ முக்கிய‌த்துவ‌மான‌து இல்லை. எந்த‌வித‌மான‌ இய‌க்க‌ங்க‌ளுக்கும் தேவையில்லை போன்ற‌ இல‌க்கிய‌த்தில் ஏற்க‌ன‌வே பேச‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளால் நிரம்பியிருப்ப‌தாக‌ இருந்த‌து. சிற்றித‌ழ் நேர்காண‌ல்க‌ள், இடைநிலை/வெகுஜன‌ ஊடக‌ நேர்காண‌ல்க‌ளில் இருந்து வேறு புள்ளியில் இய‌ங்குவ‌தாக‌ உக்கிர‌த்த‌ன்மையுட‌ன், முக்கிய‌மான‌ ஒரு விவாத‌ப் பொருளை தீவிர‌மாக‌ அல‌சுவ‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்று ந‌ம்புகிறேன்.
இந்த‌ நேர்காண‌ல் அப்ப‌டியில்லை.
க‌ட்டுரைக‌ளில் ந‌வீனின் நிக‌ழ்கால‌த்தின் குர‌ல், மஹாத்ம‌னின் இருண்ட‌ பாதை இர‌ண்டும் குறிப்பிட‌ வேண்டிய‌ க‌ட்டுரைக‌ள்.ரெ.கார்த்திகேசு எழுதியிருக்கும் தேவராஜூலு கவிதைகள் குறித்தான "என் பார்வையில்" கட்டுரையில் ரெ.கா, கவிதைகளை பகுப்பாய்வு செய்யும் முறை கவனத்திற்குரியது.

ஜெய‌ந்தி ச‌ங்க‌ரின் சீன‌க்க‌விதைக‌ள் சிறு அறிமுக‌ம் சீன‌க் க‌விதைக‌ள் ப‌ற்றிய‌ முக்கிய‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை கோர்வையாக‌ த‌ரும் க‌ட்டுரை. ஆனால் மொழிபெய‌ர்ப்பு க‌விதைக‌ள் பெரும்பான்மையான‌ மொழிபெய‌ர்ப்புக்க‌விதைகளைப் போன்றே வ‌ற‌ட்சியாக‌ இருக்கின்ற‌ன‌. வாங் ப்யூ நாம் என்ற‌ ம‌லேசிய‌க் க‌விஞ‌ரின் க‌விதையின் மொழிபெய‌ர்ப்பு ச‌ராச‌ரிக்கும் மேலான‌ மொழிபெய‌ர்ப்பு. ம‌ற்ற‌ இரு க‌விதைக‌ளின் சொற்தேர்வும், க‌ட்ட‌மைப்பும் மோச‌மாக‌ இருக்கின்ற‌ன‌.

ல‌தாவின் க‌விதைக‌ள் என‌க்கு பிடித்திருந்த‌ன‌. "நாம்.இடையில்" என்ற‌ க‌விதையின் வ‌டிவ‌த்தில் முய‌ன்று பார்த்திருக்கும் புதுமையை பாராட்ட‌ வேண்டியிருக்கிற‌து. இக்க‌விதையின் முற்றுப்புள்ளிக‌ள் கொஞ்ச‌ம் அய‌ற்சியூட்ட‌க் கூடிய‌வை என்றாலும் சிற்றித‌ழ்களை இந்த‌ வ‌கையான‌ ப‌ரிசோத‌னை முய‌ற்சிக‌ளின் க‌ள‌மாக பயன்படுத்த வேண்டியது படைப்பாளிக்கு முக்கியம்.

கவிதைகளின் தேர்வு குறிப்பிடப்பட வேண்டும். பெரும்பான்மையான‌ கவிதைகள் மிக நன்றாக வந்திருக்கின்றன.

தோழி,பாலமுருகன்,சிவம்,தேவராஜன்,மஹாத்மன்,தேவராஜூலு, பூங்குழலி வீரன்,அகிலன்,லதா,கருணாகரன், பச்சைபாலன்,ம.நவீன், சந்துரு, பத்தாங்கட்டை பத்துமலை ஆகியோர் பங்களித்திருக்கிறார்கள். நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்.அது இவர்களின் தொடர்ச்சியான இயக்கத்தை பொறுத்து இருக்கிறது. நிகழ் கவிதைகள் என்று ஐந்து கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. நிகழ் என்பது கவிஞரின் பெயரா என்று தெரியவில்லை.

கட்டுரைகளில் நான் குறிப்பிட்ட கட்டுரைகளை தவிர்த்து இதழில் உள்ள கவிதைகள் குறித்தான பிற‌ கட்டுரைகள் யாவும் கவிதை வரிகளை உள்ளே நிரப்பி எழுதப்பட்ட கட்டுரைகள். சிற்றிதழில் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லாதவை அவை.

லத்தீப் முகையதீன் என்ற மலேசியக் கவிஞரின் கவிதைகளை எம்.ஏ.நுஃமான் மொழிபெயர்த்திருக்கிறார். இது இந்த இதழ் படைப்புகளில் உச்சகட்டம் என்பேன். "யார்தான் நம்புவார்கள்" என்ற ஒரு கவிதை.

அச்சத்தினால் இரவு கிழிக்கப்பட்ட பிறகு
விடிவு வரப்போகிறது என்பதை
யார்தான் நம்புவார்

சந்தேக நெருப்பினால்
உலகம் எரிந்து சாம்பலான பின்னர்
பூக்கள் மலரப்போகிறது என்பதை
யார்தான் நம்புவார்

துரோகத்தினால்
இதயம் மூழ்கடிக்கப்பட்ட பின்னர்
காதல் மலரப் போகிறது என்பதை
யார்தான் நம்புவார்.

இத‌ழை புர‌ட்டும் போது இத‌ழில் ப‌ங்க‌ளிப்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌து இத‌ழின் ஆக்க‌ம் குறித்த‌ பொருள‌ட‌க்க‌ம் இல்லை. இது ப‌டைப்புக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம‌ளிப்ப‌து என்ற‌ ஆசிரிய‌ர் குழுவின் முடிவால் இருக்க‌லாம். அப்ப‌டியில்லையெனில் அடுத்த‌ இத‌ழில் ப‌ரிசீலிக்க‌லாம். இது குறிப்பிடும்ப‌டியான‌ குறையில்லை என்றாலும் 64 ப‌க்க‌ங்க‌ள் உள்ள‌ இத‌ழில் பொருள‌ட‌க்க‌ம் ஒரு தேவையானதாக இருக்கலாம்.

வடிவமைப்பும், அச்சாக்கமும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கும் இந்த ஒரு அம்சத்தில் சிற்றிதழுக்கான இலக்கணத்தை மீறியிருக்கிறது.

ம‌லேசியாவின் தீவிர‌ இல‌க்கிய‌ம் த‌மிழக‌த்தில் க‌வ‌னிக்க‌ப்ப‌டுவ‌தில்லை என்ற‌ ந‌வீனின் வ‌ருத்த‌த்தை முந்தைய‌ க‌ட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். ம‌லேசியாவில் மிக‌த் தீவிர‌மான‌ இல‌க்கிய‌ க‌ள‌ப்ப‌ணிக‌ள் எவ்வாறிருக்கின்றன என்பது குறித்த ஐயம் எனக்கு இருக்கிற‌து. மிக‌ முக்கிய‌மான‌ புத்த‌க‌ங்க‌ள் வாசிப்பு, அது குறித்தான‌ விவாத‌ங்க‌ள், த‌ற்கால‌ இல‌க்கிய‌ப் போக்கின் மீதான‌ க‌வ‌ன‌ம் போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளை இத‌ழ்க‌ளைத் த‌விர்த்து க‌ருத்த‌ர‌ங்குக‌ள், விவாத‌ அர‌ங்குக‌ள், வாச‌க‌ர் வ‌ட்ட‌ம் மூலமாக தீவிர‌மாக‌ முன்னெடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மிருப்ப‌தாக‌ உணர்கிறன். கோலால‌ம்பூர் தாண்டிய‌ இந்த‌ இய‌க்க‌ம் ம‌லேசியா முழுவ‌துமாக‌ செயல்ப‌டுவ‌தும் அவ‌சிய‌ம். வ‌ல்லின‌ம் இத‌ற்கான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் இய‌ங்க‌லாம். இத‌ழுக்கு அவ‌ர்க‌ள் எடுத்திருக்கும் சிர‌த்தை, அத‌ற்கான‌ த‌குதி அவ‌ர்க‌ளுக்கு இருப்ப‌தாக‌வே உணர்த்துகிற‌து.

Contact: na_vin82@yahoo.com.sg/ Phone: 006-016-3194522

****************************

** பாலமுருகன் மிக தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மலேசிய சிறுகதை எழுத்தாளர். அநங்கம் என்னும் சிற்றிதழை நடத்துகிறார். அவரைப் பற்றி விரைவில் எழுதுகிறேன்.

2 எதிர் சப்தங்கள்:

VIKNESHWARAN ADAKKALAM said...

பயனுள்ள பதிவாக இருக்கிறது... மிக்க நன்றி...

வேளராசி said...

சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ''நாம்''எனும் காலாண்டிதழ் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.