May 11, 2008

நித்யா கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட சுகுமாரன் கவிதைகள்.

1) இடவழுவமைதி

ஒரே பெயரில்
ஒரே இடத்தில்இரண்டு பேர் இருப்பது.
உசிதமல்ல என்றுணர்ந்த‌
பால்ய தினங்கள்
ஒரே வகுப்பில்
ஒரே பெயரில்
இரண்டு பேர் இருந்தோம்
முதலெழுத்தில் வித்தியாசம்
என்னுடையது 'என்'
அவனுடையது 'எஸ்'

அவனுக்கான பாராட்டு
சமயங்களில் எனக்கு
எனக்கான தண்டனை
சமயங்களில் அவனுக்கு

அடையாளம் பிரிக்க‌
பட்டப் பெயர்கள்
சூட்டப்பட்டோம்
அவன் உலக்கை
நான் ஊசி

காய்ச்சலில் விழுந்து
பள்ளிக்குப் போகாமல்
திரும்ப போன‌ நாளில்
எல்லோரும் கேட்டார்க‌ள்:

ம‌ல‌ம்புழை அணையில்
மூழ்கிய‌து நீயில்லையா?

வ‌ருகைப் ப‌திவுக்காக‌க்
கூப்பிட்ட‌போது
இர‌ண்டுமுறை எழுந்து 'உள்ளேன்' என்றேன்
அழைக்க‌ப்ப‌ட்ட‌து ஒருமுறை எனினும்.
---
2)முதலாவது வார்த்தை

எனது முதலாவது வார்த்தை
எந்த மொழியில் இருந்ததென்றோ
எந்த உணர்வால் கிளர்ந்ததென்றோ
எவ்வளவு குடைந்தும் நினைவில் இல்லை

இன்று எனக்கு
யோசிக்க பரிமாற பிழைக்க‌
மூன்று மொழிகள் தெரியும்
உபரியாக மெளனமும்

எனது கடைசி வார்த்தை
எந்த மொழியில் இருக்குமென்றோ
எந்த உச்சரிப்பில் கேட்குமென்றோ
எவ்வளவு முயன்றும் தீர்மானம் இல்லை

எதுவானாலும்
எனது நான்கு மொழிகளிலும் இல்லாததாக‌
இருக்கக் கடவது
எனது கடைசி வார்த்தை.
---
3) நீரின்றி அமையாது

திட‌மென்றால் இய‌ங்குவ‌து சிர‌ம‌ம்
ஆவியென்றால் அட‌ங்குவ‌து க‌டின‌ம்
என‌வே
திர‌வ‌ங்க‌ளால் பிணைத்தேன் உற‌வுக‌ளை

ஒவ்வொரு உற‌வுக்கும்
ஒவ்வொரு திர‌வ‌ம்

தாய்மைக்கு முலைப்பால்
ச‌கோத‌ர‌த்துவ‌த்துக்கு இர‌த்த‌ம்
காத‌லுக்கு உமிழ்நீர்
தோழ‌மைக்கு விய‌ர்வை
ப‌கைக்குச் சீழ்
தாம்ப‌த்ய‌துக்கு ஸ்க‌லித‌ம்
துரோக‌த்துக்குக் க‌ண்ணீர்

பிணைத்து முடிந்த‌தும் கை க‌ழுவினேன்
த‌ண்ணீரால்
மீண்டும்
அதே நீரால் பிணைத்தேன்
உன்னையும் என்னையும்

தெரியுமா உன‌க்கு?
உற‌வுக‌ளைப் பிணைக்க‌
த‌ண்ணீர் த‌விர‌ த‌ர‌மான‌ திர‌வ‌ம்
வேறில்லை

என் உற‌வுக‌ள் எல்லாம்
தண்ணீரால் ஆன‌வை

ஏனெனில்
நீரின்றி அமையாது உற‌வு.
---
4) க‌னிவு

நாள் க‌ண‌க்காய்
ப‌க்குவ‌ப்ப‌டாம‌ல் வெம்பும் கேள்வி
'உற‌வில் க‌னிவ‌து எப்ப‌டி?'

சொற்க‌ள் புகைந்த‌ ம‌ன‌தில்
வாழையானேன்
மிஞ்சிய‌து ச‌ரும‌ம்

ஸ்ப‌ரிச‌ங்க‌ளின் த‌விட்டுச் சூட்டில்
மாங்காயானேன்
எஞ்சிய‌து கொட்டை

உட‌ற்காய‌த்தில் சுண்ணாம்பு த‌கிக்க‌ப்
பலாவானேன்
மீந்த‌து பிசின்

இப்ப‌டி ப‌ழுப்ப‌து
இய‌ல்ப‌ல்ல‌

என‌வே
க‌னிய‌த் தொட‌ங்குகிறேன் இப்போது
ஒட்டுற‌வு இல்லாத‌ புளிய‌ம்பழ‌மாக‌
---
5) எட்டுக்காலியும் நானும்

எட்டுக்காலியும் நானும் ஒன்று
இருவ‌ரும் பிழைப்ப‌து
வாய் வித்தையால்

எட்டுக்காலிக்கு எச்சில்
என‌க்குப் பொய்

இருவ‌ரும் வ‌லைபின்னுகிறோம்
அது எச்சிலைக் கூட்டி
நான் உண்மையைக் குறைந்து

எட்டுக்காலி வ‌லை
ஜீவித‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம்
என‌து வ‌லை
ச‌ந்த‌ர்ப்ப‌ ஜீவித‌ம்

எட்டுக்காலிக்குத் தெரியும்
எச்சிலின் நீள‌மும் ஆயுளும்
என‌க்கும் தெரியும்
பொய்யின் த‌டுமாற்ற‌மும் அற்ப‌மும்

எட்டுக்காலியின் நோக்க‌ம் த‌க்க‌ வைத்த‌ல்
என‌வே
வ‌லை- ஒரு பாதுகாப்பு

என‌து தேவை த‌ப்பித்த‌ல்
என‌வே
பொய்- ஒரு பாத‌க‌ம்
வாய்வித்தைக்கார‌ர்க‌ள் இருவ‌ரும்
எனினும் எட்டுக்காலி
என்னைவிட‌ பாக்கிய‌சாலி

சொந்த‌ வ‌லையில் ஒருபோதும்
சிக்குவ‌தில்லை அது
---
தொகுப்பு: பூமியை வாசிக்கும் சிறுமி (உயிர்மை வெளியீடு)

2 எதிர் சப்தங்கள்:

ஆ.கோகுலன் said...

//காய்ச்சலில் விழுந்து
பள்ளிக்குப் போகாமல்
திரும்ப போன‌ நாளில்
எல்லோரும் கேட்டார்க‌ள்:

ம‌ல‌ம்புழை அணையில்
மூழ்கிய‌து நீயில்லையா?

வ‌ருகைப் ப‌திவுக்காக‌க்
கூப்பிட்ட‌போது
இர‌ண்டுமுறை எழுந்து 'உள்ளேன்' என்றேன்
அழைக்க‌ப்ப‌ட்ட‌து ஒருமுறை எனினும்.//

அதிர்ந்து போனேன். அபாரம்..!!

Anonymous said...

உண்மைதான் கோகுலன். முதல் கவிதை அருமை. 'உள்ளேன்' என்பதற்குப் பதில் 'இல்லை' என்றிருந்தாலும் ஒரு உடலும் ஒரு மனதும் இல்லாமல் போனதைச் சொல்லுவதாக இருந்திருக்கும் எனவும் தோன்றியது. வாழ்த்துக்கள் சுகுமாரன்.