Sep 4, 2005

நகுலன்

ஏனோ பலருக்கு கவிதைகள் பிடிப்பதில்லை.குறிப்பாக வலைப்பதிவு நண்பர்களுக்கு.கவிதையைப்பதிவில் இடும்போது மட்டும் குறைவான "ரெஸ்பான்ஸ்" .நகுலன்(தொகுப்பு:சுருதி) கவிதைகளில் எனக்கு பிடித்த சில கவிதைகள் இங்கே.

1.வேறு

உலகச்சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்

உனக்கென்று
ஒரு லாபநஷ்டக்
கணக்கிருந்தால்

விஷயம் வேறு


2.சிலர்

சிலர்
வந்ததும்
வந்து
சென்ற
பிறகும்
சூன்யமாகவே
மிஞ்சுகிறார்கள்.

3.அவன்

"செத்துவிட்டான்"
என்றாய்
எனக்கு என்னவோ
அவன் இருந்ததுதான்
இன்றும்
என் உள்ளத்தில்
இருந்துகொண்டிருக்கிறது.

4.தேடல்.

எதைத் திறந்தால்
என்ன கிடைக்கும்
என்று
எதை எதையோ
திறந்துகொண்டே
இருக்கிறார்கள்.

3 எதிர் சப்தங்கள்:

பாலதர்ஷன் said...

உங்களுக்கு எதையாவது திறந்து ஏதாவது கிடைத்ததா?

குழலி / Kuzhali said...

//ஏனோ பலருக்கு கவிதைகள் பிடிப்பதில்லை.குறிப்பாக வலைப்பதிவு நண்பர்களுக்கு.கவிதையைப்பதிவில் இடும்போது மட்டும் குறைவான "ரெஸ்பான்ஸ்"
//

எனக்கும் இதே சந்தேகம் தோன்றியது சில சமயங்களுக்கு முன் அதற்கு பாலுவின் மறுமொழி,

//பொதுவாகவே கவிதைகளை " அட! " என்று லேசாக வியப்பதோடு நின்று விடுகிறது மனது.கட்டுரைகளோடோ உடன்படவோ, மறுக்கவோ செய்கிறது...உடன்படும்போதும், மறுக்கும்போதும், பின்னூட்டங்கள் வருவது இயல்புதானே?//

சரியாகத்தான் தோன்றுகின்றது எனக்கு

கவிதை நன்றாக உள்ளது

நன்றி

Anonymous said...

நில் போ வா
வா போ நில்
நில் போ வா?